அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 39: 'இரண்டு கவளம் உணவு கூடவா தரமாட்டான்?'
http://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_5241.html
நபிகளார் ஏற்றி வைத்த ஒப்பற்ற இறைநெறி இஸ்லாம். அதன் ஒளிவெள்ளத்தில் தடம் மாறாமல் பயணம் செய்வோர் உயரிய மனித விழுமியங்களை வெளிப்படுத்துகிறார்கள். மனித இனத்தில் தடம் பதித்துச் செல்கிறர்கள். அதை இந்த வரலாற்றுச் சம்பவத்தில் காணலாம்.
ஜனாதிபதியை பெயர் சொல்லி அழைக்கிறார் ஒரு சாதாரண துறவி. ஆட்சி-அதிகாரத்துக்கு கொஞ்சமும் அஞ்சாமல் அறிவுரைக் கூறுகிறார்.
அதை நின்று கேட்கிறார். தவறை உணர்ந்து அழுகிறார் பாராளும் ஜனாதிபதி.
என்னே அற்புதமான அருட்கொடை! இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்.. இதோ!
ஒருமுறை, ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். வழியில் கஅபாவில் தங்க வேண்டி வந்தது.
ஜனாதிபதியைத் தரிசிக்க மக்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டார்கள்.
கூட்டத்திலிருந்து யாரோ, "ஹாரூன்! ஹாரூன்!" - என்று அழைக்கும் குரல் கேட்டது.
'இப்படி அநாகரிகமான முறையில் ஜனாதிபதியைப் பெயர் சொல்லி அழைப்பது யார்?' - என்று எல்லோரும் பார்த்தார்கள்.
அங்கே, இறைநேசர் ஷா ப ஹ்லூல் (ரஹ்) சோகமாய் நிற்பதைக் கண்டார்கள்.
"அய்யா, பெரியீர்! என்ன வேணும்?" - என்று ஹாரூன் ரஷீத் அவரிடம் பணிவுடன் கேட்டார்.
"ஹாரூன்! இறைவன் மீது ஆணையாக! இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் (ஸல்) ஹஜ் பயணம் இப்படி ஆடம்பரமாக, டாம்பீகமானதாக இருந்ததில்லை. அதனால், எளிமையைக் கடைப்பிடித்து இறையில்லத்தைத் தரிசிக்க செல்வதே நல்லது!"
இறைநேசரின் அறிவுரையைக் கேட்டு ஜனாதிபதி அழ ஆரம்பித்தார். அதன்பின் அப்பெரியார்க்கு பரிசுப் பொருளைத் தர முயன்றார். அதை அவர் ஏற்க மறுத்தார்.
"அய்யா! இன்று என்னுடன் அமர்ந்து ஒருவேளை உணவாவது உண்ண வேண்டும்!" - என்று ஹாரூன் ரஷீத் கேட்டுக் கொண்டார்.
ஷா பஹ்லூலோ (ரஹ்), வானத்தின் பக்கம் தலையை உயர்த்தி, "ஹாரூன்! நானும் நீயும் இறைவனின் அடியார்கள். உனக்கு இவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தவன் எனக்கு இரண்டு கவளம் உணவு கூடவா தராமல் போய்விடுவான்?-என்று கூறியவாறு சென்றுவிட்டார்.
- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.