'ஒரு பியூன் அழைப்பியலில் உருவான கல்வியாளர்'
http://udayathaaragai.blogspot.com/2013/02/blog-post_16.html
"நான் உங்களை மற்றொரு பியூனின் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். இவரும் மிகக் குறைந்த ஆற்றலுடையவர்தான்! இவரது வீட்டிற்கும் பணிபுரியும் அலுவலகத்திற்கும் இடைபட்ட தொலைவு 40 கி.மீ. இவர் தன்னுடைய பையில் இஸ்லாம் குறித்து ஹிந்தி புத்தகங்களை வைத்திருப்பார். பணிக்கு இரயில் வண்டியில் செல்லும் போது, சக பயணிகளான மாணவர்களில் புத்தி கூர்மையுள்ளவரை தேர்ந்தெடுத்து, "மகனே இந்த புத்தகத்தில் உள்ளதை எனக்குக் கொஞ்சம் படித்துக் காட்டப்பா!" - என்று கனிவுடன் கேட்பார்.
இஸ்லாமிய சிந்தனையாளர், மூதறிஞர் மௌலான ஜமீல் அஹ்மது சாஹிப் அவர்களின் அழைப்பியல் உண்மைச் சம்பவங்களிலிருந்து..
மௌலானா எம்.ஏ.ஜமீல் அஹ்மது |
அந்த மாணவனும் நூலைப் படித்துக் காட்டுவார். இடை இடையே இவரும் சில கேள்விகளைக் கேட்பார். மாணவனும் அவற்றுக்கான பதிலை புத்தகத்தில் தேடிப் பிடித்து விளக்கம் அளிப்பார்.
இப்படி இரயில் பயணங்களில் நாள்தோறும் அழைப்பியல் தொடர்ந்தது.
காலை, மாலை இரு வேளைகளிலும் இரயில் பயணங்கள் அறிவுப் பயணங்களாக தொடர்ந்தன. ஏராளமான பேருக்கு இஸ்லாம் எளிமையாக பரிச்சயம் ஆனது. இதனால், சிலர் இஸ்லாத்தை ஏற்கவும் செய்தனர். அதில் ஒருவர்தான் பாங்காராம்!
அது.. 1960 ஆம் ஆண்டு.
பாங்காராம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவரது குடும்பத்தாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு பல்வேறு கொடுமைகளை இழைத்தனர்.
ஆனால், பாங்காராமோ தனது கொள்கையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. இறுதியில் அவரைத் தீர்த்துக் கட்டவும் குடும்பத்தார் முடிவெடுத்துவிட்டனர்.
இந்த இக்கட்டான சூழலில் பாங்காராம் வீட்டைத் துறந்து செல்ல வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ வேண்டியிருந்தது. வடநாட்டிலிருந்து.. அவரை தென்னகத்துக்கு புலம் பெயரவும் செய்தது.
பாங்காராம் வடஆற்காடு மாவட்டத்தின் உம்ராபாத்தில் உள்ள ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்றார். அதன்பின் மதீனா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். அடுத்து எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். கடைசியில் மதீனா பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் நபிகளார் தமது வாழ்வில் தீர்ப்பளித்த வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு செய்து அதற்கான பட்டமும் பெற்றார். அவரது ஆய்வு நூல்கள் இஸ்லாமிய சட்ட நுட்பங்களை அறிய, ஆய்வு செய்ய இன்றளவும் துணை நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இளைஞர் கல்வியில் அடைந்த உச்சமும், அறிவுத்துறையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களும் வியப்புக்குரியவை!
ஆனால், இந்த சம்பவத்தின் பின்னணிக்குக் காரணமான ஒரு சாதாரணமான கடைநிலை ஊழியரான அதுவும் கல்வி அறிவில் பின்தங்கியிருந்த அந்த பியூனின் விவேகமான அழைப்பியல் பணிக்கு இறைவனிடம் கிடைக்கவிருக்கும் வெகுமதிகள் இதைவிட வியப்புக்குரியவை அல்லவா?
நன்றி: சமரசம்