அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 14: இருளில் வந்த வெளிச்சம்..!

சில தலைவர்கள் பேசுவார்கள்! செயல்பட மாட்டார்கள். இன்னும் சிலரோ தத்துவங்களாய் சமைப்பார்கள்! அவை செயலுருவம் பெறாது.

ஆனால், இந்தத் தலைவரோ சொன்னார். சொன்னதை செய்தார். சொல்-செயல் இவற்றின் முன்மாதிரியாய் இருந்து அடுத்தவர் பின்பற்றிடவும் வழிவகுத்தார்.

தமக்குப் பின்னரும் ஓர் உன்னதமான சமூக அமைப்பு நிர்மாணத்துக்கான குழிகற்களாகவும் அவரது போதனைகள், கொள்கைகள் அமைந்தன.

வெறும் கற்பனை கதைகள் அல்ல அவை! நிஜங்கள் காலந்தோறும் .. வியப்பூட்டும் நிஜங்கள்..!

அந்த மாபெரும் தலைவர், உலக மக்கள் அனைவருக்கும் அருள் மழையாக வந்தவர்தான் நபிகள் நாயகம்!

இன்றையை 'அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையில்..' உடல புல்லரிக்கச் செய்யும் ஒரு முன்மாதிரி இதோ!

  நள்ளிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மதீனா நகரம்.

சலசலக்கும் பேரீத்த மர ஓலைகளின் ஓசையைத் தவிர எங்கும் நிலவியது நிசப்தம்.

நெடிதுயர்ந்த உருவம் ஒன்று ஒவ்வொரு தெருவாய் நடந்து கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் ஆளரவமற்ற பாலைவனத் திடலில் 'மினுக் மினுக்' கென்று விளக்கு எரிய அதை நோக்கி நடந்தது.

அங்கே ஒரு மனிதர் சோகத்துடன் அமர்ந்திருந்தார்.

விசாரித்ததில் கூடாரத்தில் பிரசவ வேதனையில் அவரது மனைவி துடிக்கும் விஷயம் தெரிந்தது. மருத்துவம் பார்க்க பணமுடை வேறு.

இதைக் கேள்விப்பட்டதும் தன் வீட்டுக்கு விரைந்தது அந்த உருவம். தனது மனைவியை உடனே தன்னுடன் கிளம்பும்படி பணித்தது.

"நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே?"- மனைவி கேட்டார்.

"ஆமாம். அந்த உணவு இன்னொருவருக்குத் தேவைப்படுகிறது!"

"கொஞ்சம் பாலாவது சாப்பிடலாமே?"

"வேண்டாம்.. பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். அவற்றை எடுத்துக் கொண்டு சீக்கிரம் கிளம்பு.. போகலாம்!"- என்றது அவ்வுருவம்.

சற்று நேரத்தில் அவர்கள் கூடாரத்தை அடைந்தார்கள்.

மனைவியை உள்ளே அனுப்பி வைத்த உருவம் கூடாரவாசியிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, கூடாரத்திலிருந்து.. "ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூருங்கள். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!" - என்று குரல் வந்தது.

ஜனாதிபதி என்ற சொல் கூடாரவாசியை நிலைகுலைய வைத்தது.

பதறியவாறு அவர், "இந்த நாட்டின் தலைவரான தாங்களா.. இப்படி..?" - என்றார்.

"இதில் வியப்படைய என்ன இருக்கிறது சகோதரரே? ஒரு நாட்டின் தலைவன் உண்மையில் மக்களின் தலையாய ஊழியனில்லையா?" - என்றார்கள் மாறு வேடத்தில் இருந்த ஜனாதிபதி உமர் (இறையருள் பொங்கட்டுமாக!) அவர்கள்.

பரந்து விரிந்த இஸ்லாமிய பேரரசின் தலைவர் ஒரு முதல்நிலை மக்கள் சேவகராக அங்கே விளங்குகிறார். .

அவரது துணைவியாரோ மகப்பேறு மருத்துவம் பார்க்கும் மருத்துவச்சியாக வரலாற்றில் பதிகிறார்.

இதே உமர் (இறையருள் பொழிவதாக!) அவர்களின் ஆட்சியைத்தான் இந்தியாவில் கனவு கண்டார் காந்தியடிகள்.

இத்தகைய உன்னத உதாரணங்களை சமைத்துக் காட்டியதுதான் தவறு என்கிறார்களா மேற்கத்திய அறிவு ஜீவிகள்?

 - இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.


Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 4386481044979604914

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress