அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 16: 'ஒட்டகம் ஏன் அழுதது..?'

படைத்தவன் தனது படைப்புளுக்கான திட்டமாக ஆக்கி வைத்ததே இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறி! சூரிய-சந்திரனைப் போல,அண்டசாரங்கள் போல, இம்மியும் பிசகாமல் படைத்தவனுக்கு அடிபணிதலில்தான் அமைதி கிடைக்கும் என்பது நம்மை சுற்றியுள்ள அனைத்தும் நமக்குச் சொல்லும் செய்தி!

இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியை மனிதர்களுக்கு இறைவனிடமிருந்து சுமந்து வந்த கார்மேகம்தான் நபி பெருமானார். இறைவனின் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் அவர்கள். அன்னாரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறும், கேட்பவரை.. படிப்போரை ஈர்த்துவிடும்.

இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்.. ஓர் ஒட்டகத்தின் உணர்வுகளை உள்வாங்கி அதன் உரிமைகளையும் மீட்டுத் தந்தார்கள் நபிகள் நாயம் என்பதைப் பற்றியது.

  மதீனா மாநகரம்!

அன்பு நபி வாழ்ந்த இடம்.

நகரைச் சுற்றியும் அடர்த்தியான தோட்டங்கள். தோட்டத்தில் வளர்ந்திருந்தன பல வகையான மரங்கள். சூரிய ஒளி ஊடுருவ முடியாதவாறு படர்ந்திருந்த நிழல். வெய்யிலின் கொடுமையே தெரியாது அங்கே. பகல் பொழுது ஜிலு.. ஜிலுவென்று குளிர்ச்சியாக இருக்கும்!

மதீனாவாசிகள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்துக்க கொள்ள மர நிழலில் களைப்பாறுவார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசி மகிழ்வார்கள்.

ஒருநாள்.

நபிகளார் மக்களைச் சந்தித்து பேசச் சென்றார்கள். வழியிலிருந்த தோட்டத்தில் நுழைந்தார்கள்.

உள்ளே-

மரநிழலில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்னும் பலர் அந்தத் தோட்டத்தில் இருந்தார்கள்.

தோட்டத்தின் ஒரு மூலையில் ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை நபிகளார் கண்டார்கள்.

ஒட்டகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனிடமிருந்து பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.

நபிகளார் ஒட்டகத்தின் அருகில் சென்றார்கள்.

ஒட்டகம் அழுது கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அழுதழுது அதன் முகம் ஈரமாக இருந்தது. அது எலும்பும்-தோலுமாய் மெலிந்திருந்தது.

அன்பு நபியின் மனம் இளகிவிட்டது. ஒட்டகத்தின் பரிதாப நிலை அன்னாரை கலங்கடித்தது.

நபிகளார் ஒட்டகத்தை பரிவுடன் தடவிக் கொடுத்தார்கள். அதன் கண்ணீரை துடைத்து விட்டார்கள்.

நபிகளாரின் இதமான வருடல் ஒட்டகத்தின் அழுகையை நிறுத்தியது. முனுகலும் நின்று போனது! மகிழ்ச்சி அடைந்ததற்கு அடையாளமாக ஒருவிதமான சத்தத்தையும் எழுப்பியது.

நபிகளார் தோட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தார்கள். "இதன் உரிமையாளர் யார்?" - என்று விசாரித்தார்கள்.

அதைக் கேட்டு ஒட்டகத்தின் உரிமையாளர் நபிகளாரிடம் வந்தார். "இறைவனின் திருத்தூதரே, நான் தான் இதன் உரிமையாளன்!" - என்றார்.

ஒட்டகத்தின் உரிமையாளர் ஒட்டகத்திடம் கொடுமையாக நடந்து கொண்ட விதத்தை நபிகளார் சுட்டிக் காட்டினார்கள்.

ஒட்டகம் சரியான பராமரிப்பு இல்லாமல் மெலிந்திருந்தது. அதிக பணிச் சுமைத் தாங்காமல் பலவீனமாகி விட்டது. அதற்கு போதுமான தீவனம் இல்லை. குடிக்கத் தண்ணீரும் வைப்பதில்லை.

நபிகளார் இதை எல்லாம் ஒட்டகத்தின் உரிமையாளரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

" இந்த வாயில்லாத ஜீவனான ஒட்டகத்தின் விஷயத்தில் இறைவனின் பயம் உனக்கு ஏற்படவில்லையா?" - என்று கேட்டார்கள்.

ஒட்டகத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அதன் உரிமையாளரிடம் நபிகளார் அறிவுறுத்தினார்கள்.

ஒட்டகத்தின் உரிமையாளர் தனது தவறை புரிந்து கொண்டார்.

"நான் தவறு செய்துவிட்டேன். ஒட்டகம் இறைவனின் படைப்புகளில் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் எனது தவறுகளுக்காக வருந்துகிறேன் இறைவனின் திருத்தூதரே!" - என்றார் அவர் சோகத்துடன்.

"எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டு!" - என்பது நபிகளாரின் செயலுருவ போதனை!
~~~~~  இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.


Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 8166418145884299677

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress