ஹைதராபாத்: சிறுவனை உயிரோடு எரித்த குற்றம்சாட்டப்பட்ட ராணுவ வீரர் தற்கொலை
https://udayathaaragai.blogspot.com/2014/11/blog-post.html
![]() |
| சையத் முஸதபா |
ஆந்திரப்பிரதேசத்தின் ஹைதராபாத்,
மெஹ்திப்பட்டினம் ராணுவ முகாமில் 11 வயது சிறுவன் உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராணுவ வீரர் தற்கொலை
செய்து கொண்டார்.
கடந்த
அக்டோபர் மாதம் 9-ஆம், தேதி ஆந்திரப்பிரதேசத்தின் ஹைதராபாத்
மெஹ்திப்பட்டினம் ராணுவ முகாமில் வசித்துவந்த 11 வயதுதான சிறுவன் சையத்
முஸதபா 90 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்
மீட்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.
இறக்கும்தறுவாயில்,
சிறுவன் முஸ்தபா மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை
ராணுவ வீரர்கள் தீ வைத்து எரித்ததாக குறிப்பிட்டார். அதற்கு ஆதாரமாக
சம்பவம் நடந்த இடத்தில் மண்ணெண்ணெய் பாட்டிலும், தீக்குச்சிகளும் தடயங்களாக
சிக்கின.
இந்த சம்பவம் அந்தப் பகுதி
மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் கண்டன
ஊர்வலங்கள் நடத்தின. இது சம்பந்தமான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும்
அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சிறுவன் முஸ்தபாவை எரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த ராணுவ வீரர் அப்பளராஜ் திங்கள் கிழமை காலை (இன்று) தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தின்
மெஹ்திபட்டினம் ராணுவ முகாமுக்கு உட்பட்ட பகுதி சித்திக் நகர். இங்கு
முஸ்தபா தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
பாதுகாப்பு காரணங்களையொட்டி தடை செய்யப்பட்ட இதில் குடியிருக்கும்
சித்திக்நகர்வாசிகளுக்கு ராணுவம் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கியிருந்தது.
ராணுவ வீரர்களால் சிறுவன் முஸ்தபா உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட குற்றச்சாட்டை ராணுவம் மறுத்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
