அண்ணல் நபியின் கன்னல் மொழி: 'இறைநம்பிக்கை என்பது..'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_3883.html
ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தேகம் என்றால்.. அந்த நபித்தோழருக்கோ இறைநம்பிக்கைப் பற்றி சந்தேகம் வருகிறது.
'முஸ்லிமுக்கு ஈமான் குறித்து சந்தேகமா? அதுவும் அருமை நபித்தோழர்களில் ஒருவருக்கா சந்தேகம்?' - என்று உங்கள் புருவங்கள் உயரலாம்.
கொண்ட கொள்கையில் தெளிவிருந்தால்தான் பிடிமானமும் உறுதியாக இருக்கும்.
அன்பு நபிகளாருக்கும், அருமைத் தோழருக்கும் இடையிலான அந்த உரையாடல் இப்படி தொடர்கிறது:
"இறைவனின் தூதரே! ஈமான் என்றால் என்ன?"
"ஈமான் என்பது பொறுமையும், ஸமாஹத் - வரையாது வழங்குவதுமாகும்!"
கேட்டவருக்கு கேள்விக்கான விளக்கம் கிடைத்துவிட்டது. நமக்கு?
ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியாக இறைவழியை தேர்ந்தெடுத்தான். அந்த வழியில் செல்லும்போது அவனுக்கு இன்னல், இடுக்கண்கள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொள்கின்றான். இறைவனின் பேரருளைக் கொண்டு தனது வழியில் உறுதியுடன் தடம் பதிக்கின்றான். இதுதான் 'ஸப்ர் - பொறுமை' எனப்படுவது.
இன்னொரு மனிதன் தான் சிரமப்பட்டு சம்பாதித்தவற்றில் ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்களின் நலனுக்காக, இறைவனின் திருப்தியை மட்டுமே பெறும் நோக்கத்துடன் செலவழிக்கின்றான். அப்படி செலவழிப்பதில் இன்பம் காண்கின்றான் என்பதுதான் 'ஸமாஹத்' என்பதாகும்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பாளர்: அம்ரு பின் அபஸா (ரலி)
