அழைப்பது நம் கடமை - 1: 'அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை! - பகுதி 1'
https://udayathaaragai.blogspot.com/2012/11/1_25.html
கடற்கரையோரம் அமைந்திருந்த அந்த ஊரின் பெயர் அய்லா.
இப்போது இஸ்ரேல் நாட்டு அய்லாத் துறைமுகம் உள்ள பகுதியில் அது இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜோர்டானின் முக்கியத் துறைமுகமான ஹீக்பா இதன் பக்கத்தில்தான் உள்ளது.
போக்குவரத்து மிகுந்த பெருநகரம் அய்லா.
மீன்பிடித்தல் அய்லாவாசிகளின் முக்கியத் தொழில்.
அய்லாவாசிகள் செல்வந்தர்களாகவும், அறிஞர்களாகவும், கல்வியாளர்களாகவும் இருந்தார்கள். அந்த சமுதாயத்தாருக்கு 'ஸப்த் - சனிக்கிழமை' சிறப்பு நாளாக இருந்தது. புனித நாளாக இறைவனால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய நாளில் இறைவனை வணங்கி வழிபட வேண்டும். சமயச் சடங்குகளில் லயித்திருக்க வேண்டும். உலகப் பணிகள் எதையும் செய்யக் கூடாது. வணிகம், வேளாண்மை, வேட்டையாடுதல் போன்ற பணிகள்கூட தடுக்கப்பட்டிருந்தன. சமையலுக்காக அடுப்புக்கூட எரிக்கக்கூடாது.என்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றை மீறுபவர்கள் மரணதண்டனைக்குக்கூட ஆளானார்கள்.
இப்படி காலங்காலமாக இந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டு வந்தன.
சனிக்கிழமைகளில் அந்த அதிசயம் தவறாமல் நடந்துவந்தது. பொழுது விடிந்ததோ இல்லையோ மீன்கள் கூட்டங்கூட்டமாக கடலில் திரண்டுவரும். வலையோ, தூண்டிலோ தேவையில்லை. கையாலேயே மீன்களைப் பிடிக்கலாம். அய்லாவாசிகளுக்க மனமாய் அடித்துக் கொள்ளும்.
ஆனால், அன்று மாலையே மறுபடியும் அந்த அற்புதம் நடக்கும்.
பொழுது சாய்ந்ததும், "மீன்களா? இந்தக் கடலிலா? யார் சொன்னது?" அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பும அளவுக்கு மீன்கள் காணாமல் போகும்.
'ஸப்து புனித நாளை ஊர்வாசிகள் பின்பற்றுகிறார்களா? இல்லையா?'- என்று சோதிக்கவே இறைவனின் இந்த ஏற்பாடு.
நீண்ட காலமாக அய்லாவாசிகள் புனித சனிக்கிழமையை பேணுதலோடு பின்பற்றி வந்தார்கள். மன இச்சைகளைப் பின்தள்ளி இறைநம்பிக்கையை வலுப்படுத்தினார்கள்.
ஆனால், நாளாக.. நாளாக.. அவர்களின் மனங்களில் உலகாசை ஊசலாட்டம் போட ஆரம்பித்தது. இதன் விளைவாக மோசடிகளில் ஈடுபடலானார்கள்.
வெள்ளிக்கிழமையே கடலோரம் கால்வாய்களை வெட்டிவிடுவார்கள். கால்வாய்களின் முனைகளில் ஆழமான பள்ளங்களை தோண்டி வைப்பார்கள். சனிக்கிழமை திரண்டுவரும் மீன்கள் கால்வாய்களின் வழியே பள்ளங்களில் விழ்ந்துவிடும். அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை விடியலில் சென்று மீன்களைப் பிடித்துக் கொள்வார்கள். நாங்கள் சனிக்கிழமைதான் மீன் பிடிக்கவில்லையே! இறைவனின் கட்டளைகளை மீறவில்லையே என்று நடிப்பார்கள்..
அய்லாவாசிகளிடம் பேராசை அதிகரித்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது. இதன் விளைவாக புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டது. அந்நாளில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவது பெரும் சுமையாக கருதப்பட்டது. வயதானவர்களுக்காகவே சமயச் சடங்குகள் என்ற நிலைமை ஏற்பட்டது.
-இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

