அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 44: 'இறைவன் வெட்கப்படுகின்றான்..'
https://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_21.html
இறைவன் வெட்கப்படும் செய்தி குறித்து இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில் பார்க்கப் போவதென்ன..?
வானமெங்கும் அளந்திடத் துடிப்பவன். பூமி முழுவதையும் அகழ்ந்திட துடிப்பவன். நீரா..? நிலமா..? கவலையில்லை என் ஆர்ப்பரித்து பல உண்மைகளை விஞ்ஞான ஒளியில் உலகிற்கு புலப்படுத்தி வரும் வல்லமை பொருந்தியவன் மனிதன்.
இது அவனுடைய பலம்!
உயிர் இழப்புகள், பொருளாதார நஷ்டங்கள், பிணக்கு-பூசல்கள் என்று பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படும்போது, சோர்ந்து விடுபவன்.. தன்னை மீறிய ஏதோ சக்தி இருப்பதை உணர்ந்து அதை சரணடைபவனும் இதே மனிதன்தான்.
இது அவனுடைய பலவீனம்!
தன்னுடைய பலம், பலவீனம் இவைகளை சரியான முறையில் உணர்ந்துக்கொண்டு அதனடிப்படையில் வாழும்போதுதான் இப்பூவுலகில் மனிதனால் அமைதியை நிலைநாட்டிட முடியும்.
சாதாரண பிரச்சினைகள் எதிர்படும்போது அடுத்தவரின் துணைய .. உதவியை நாடுவது மனித இயல்பு. மனித சக்திக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ பிரச்சினைகள் வாழ்க்கை அரங்கில் எதிர்படவே செய்கின்றன.
இத்தகைய சூழலில் இறைவனிடம் இறைஞ்சி நிற்பதில்தான் மனித மனம் அமைதி அடைகிறது. இதையே திருக்குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:
"அறிந்து கொள்ளுங்கள். இறைவனை நினைவுகூர்வதில்தான் உள்ளங்கள் அமைதி அடைகின்றன!" (திருக்குர்ஆன்: 13:28)
"அடியான் கையேந்தி இறைவனிடம் இறைஞ்சும்போது, அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு இறைவன் வெட்கப்படுகின்றான்!" - என்கிறார்கள் அண்ணல் நபி.
"... பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் அடியான் அவசரப்படக்கூடாது. ஏனெனில் பிரார்த்திப்பவன் கேட்பவற்றையே சில நேரங்களில் இறைவன் வழங்குகின்றான். சில நேரங்களில் அதை விட சிறந்ததையும் கொடுக்கின்றான் அல்லது பிரார்த்தனைகளைக் கொண்டு அடியானுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான்!" - என்றும் நபிகளார் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.
இறைவனும் தன் அடியார்களுக்கு இப்படி உறுதிமொழி அளிக்கின்றான்:
"நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவரின் அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்!" (திருக்குர்ஆன் : 2:186)
-- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.


