அழைப்பது நம் கடமை - 6, படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு
https://udayathaaragai.blogspot.com/2012/12/6.html
நல்லுரை மனித உள்ளங்களில் பெரும் மாறுதலை உருவாக்கும். பிர்அவ்னிடம் அனுப்பும்போது, தனது தூதர் மூஸா நபிக்கு இறைவன் சொன்னது இது:
"அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும் அல்லது அஞ்சக்கூடும்" (திருக்குர்ஆன் - 20:44)
மற்றோர் இடத்தில் அழைப்புப் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளை இறைவன் கற்றுத் தருகிறான்:
"(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும், உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!"
இறைவனின் திருமுன் நிற்கும் வேளையில் தனது அழைப்பைக் குறித்து இறைவன் கேட்பான். அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு நூஹ் நபி தமது அழைப்புப் பணியைத் தொடர்கிறார்.
"மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன்" (திருக்குர்ஆன - 11:29)
எந்த மாய ஜால வித்தைக்கும் சொந்தக்காரர் என்று நூஹ் நபி தம்மைப் பிரகடனப்படுத்தவில்லை.
"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் வாதிடவில்லை" ( திருக்குர்ஆன் - 11:31).
மறுமையில் நடக்கவிருக்கும் விஷயங்கள் அனைத்தும் அறிந்தவன் அல்லஹ்தான் என்று தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்திவிடுகிறார்.
அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் ஏழை-பாழைகள், சமூக அந்தஸ்து அறவே இல்லாதவர்கள். ஆனால், உண்மையை ஒப்புக் கொண்டவர்கள். சத்தியத்துக்கு சான்று பகர முன்வந்தவர்கள். அவர்களின் இறைநம்பிக்கைக் குறித்து இறைவன் மட்டுமே அறிந்தவன்.
"எவர்களை உங்கள் கண்கள் இழிவானவர்களாக காண்கின்றனவோ அவர்களைக் குறித்து அல்லாஹ் எந்த நன்மையும் அவர்களுக்கு அளிக்கவில்லை என்றும் நான் கூற மாட்டேன். அவர்களின் நெஞ்சங்களின் உள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான். அவ்வாறு கூறினால் திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!" (திருக்குர்ஆன் - 11:31)
தமது பொறுப்பு என்னவென்பதையும் தெளிவுபடுத்திவிடுகின்றார் நூஹ் நபி:
"நாங்கள் உம்மை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள! அதற்கு நூஹ் கூறினார்: 'அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்? அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?' நம்பிக்கை கொள்வோரை விரட்விடுவது என் பணியன்று. நானோ தெளிவாக எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன்" (திருக்குர்ஆன்- 26:111-115)
பல்லாண்டு இந்த அழைப்புத் தொடர்கிறது. ஒரு சிலரைத் தவிர, மக்கள் நூஹ் நபியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
"நாம் நூஹை அவருடைய சமுதாயத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமைப் புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது" (திருக்குர்ஆன் - 29:14)
-- அழைப்பது தொடரும்.


