ஒரு சொல்: 'வழிகாட்டும் ஒளிவிளக்கு'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_25.html
இறைவனின் அருட்கொடைகளிலேயே
மிகப் பெரிய அருட்பேறு இஸ்லாத்தைத் தழுவுதல் என்னும் அருட்பேறு. இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்த இந்த அருட்பேறு கிடைப்பதும், இப்போது கிடைத்திருப்பதும் அறிவை அடிப்படையாகக் கொண்டது.
அறிவு இல்லை என்றால்.. இந்த அருட்பேறு மனிதனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. ஏதோ சிறிதளவு கிடைத்திருந்தாலும் அறியாமையின் அடிப்படையில், எந்த
நேரத்திலும் அது கையைவிட்டு நழுவிப் போவதற்கான வாய்ப்பு உண்டு.
அறியாமையினால்,
தான் முஸ்லிமாய் இல்லாத நிலையிலும் ஒருவன், ‘தான் முஸ்லிமாய்த்தான் இருக்கின்றேன்!”
– என்று அவன் தனக்குத்தானே நினைத்துப் கொண்டிருப்பான். உண்மையில், அவன் முஸ்லிமாய்
இருக்க முடியாது.
- ‘இஸ்லாத்துக்கும், குஃப்ருக்கும் அதாவது இறைநிராகரிப்புக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?’
- ‘ஏகத்துவத்துக்கும், ஷிர்க்குக்கும் அதாவது இணை வைத்தலுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?’
- என்பதைக் கூட
புரிந்துகொள்ளாத ஒருவனுக்கு இவ்வாறு உவமை கூறலாம்:
‘ஒரு மனிதன் இருள்சூழ்ந்த
வேளையில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்கிறான். அந்த நேரான பாதையில் சென்று கொண்டிருக்கிற
அவனது கால்கள் அவனுக்கே தெரியாமல் தாமாகவே வேறொரு பாதையில் வழிமாறிடக்கூடும்! இருள்
சூழ்ந்திருக்கும் அந்த வேளையில் அதனை அவனால் தெரிந்துகொள்ள முடியாது. அப்போதும் தான்,
நேரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பான். தன்னுடைய பாதை
மாறிவி;டது என்பது அவனுக்குத் தெரியாது.
இது மட்டுமல்ல..
வழியில் ஒரு ‘தஜ்ஜால்’ எனப்படும் ‘தீயவன்’ நின்று கொண்டு “நண்பா! இருளின் காரணத்தினால்
உனது வழி தவறிவிட்டது. என்னோடு வா! நீ செல்ல வேண்டிய இடத்துக்கு நான் அழைத்துச் செல்கின்றேன்!”
– என்று சொன்னால்.. ‘நேரான பாதை எது?’ – என்பதைத் தெரிந்து கொள்ளாத அந்த அப்பாவி வழிப்போக்கன்,
முட்டாள்தனமாகத் தன்னுடைய கையை அந்த தீயவனின் கையில் கொடுத்து விடுவான்.
பிறகென்ன? அந்தத்
தீயவனோ இந்த அப்பாவியை எங்கெல்லாமோ அழைத்துச் சென்று வழிகெடுத்து விடுவான்.
இந்த அவலநிலைக்கு
என்ன காரணம்?
தன்னுடைய பாதையை அடையாளம் காட்ட உதவும் ‘ஒளி விளக்கு’ அவனிடம் கிடையாது.
எனவே, அவனால் பாதையை அடையாளம் காண முடியாது. அந்த ‘ஒளிவிளக்கு’ இருந்திருந்தால் இவனை
மற்றொருவனால் வழிகெடுக்க முடியாது.
இந்த உவமானத்தையே
உதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்!
ஒரு முஸ்லிமுக்கு
மிகப் பெரிய ஆபத்து ஒன்று இருக்கிறது என்றால்..
அது இஸ்லாத்தின்
அறிவுரைகளை.. போதனைகளை அவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
- திருக்குர்ஆனின் போதனைகள் யாவை?
- நபிகளாரின் வழிகாட்டுதல்கள் என்ன?
-என்பவற்றை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான்!
இந்த அறியாமையின்
காரணத்தால் அவன் தானாகவே வழிகெட்டுப் போக முடியும் அல்லது ‘தஜ்ஜாலி’னாலும் வழிகெடுக்கப்பட
முடியும். அவனிடம் அறிவு என்னும் ‘ஒளிவிளக்கு’ இருந்திருந்தால்.. வாழ்வின்
ஒவ்வொரு அடியிலும் அவனால் இஸ்லாத்தின் நேரிய பாதையைப் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள
முடியும்.
வாழ்வின் ஒவ்வொரு
அடியிலும் இறைமறுப்பு, இணை வைத்தல், வழிகேடு, பாவம், தீமைகள் முதலான கோணல் பாதைகளின்
குறுக்கீடுகள் எதிர்பட்டால்.. அறிவொளிப் பெற்ற மனிதனால்.. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள
முடியும். வழிகேடன் யாராவது அவனை வழியில் சந்தித்தால்.. அவன் கூறுகின்ற ஒன்றிரண்டு
விஷயங்களைக் கேட்டதும் அவன் வழிகெடுப்பவன் என்பதைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அவனைப் பின்பற்றக்
கூடாது என்பதனை உடன் புரிந்து கொள்ளவும் இயலும்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

