ஆன்மிகச் சிந்தனை: 'அஞ்சி வாழ்வோம்'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_16.html
வசந்தம்.
விருட்ச நங்கைகளின் சிங்காரிப்புக் காலம். பூமி எங்கும் விழா எடுக்கும் தாவரங்கள், செடி - கொடிகள், நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் பருவமிது. இந்த பருவம் நிலையானதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஆனால், சாத்தியமில்லை! பருவம், கால ரங்கராட்டினத்தில் சுழலும் குழந்தை.
காலம் உலக மேடையில் எத்தனைதான் நாட்டியமாடினாலும் எல்லாம் தற்காலிகமானதே!
உலகம் ஒரு நாடக மேடை. இங்கு மனிதனை மயக்கும் பொருட்கள் ஏராளம்.
மனிதன் தன் தொலைநோக்குப் பார்வை மங்கலில் உலகப் பொருட்களில் சிக்கி மயங்கிப் போவதுமுண்டு; உலக இன்பங்களே அவனுடைய வாழ்வின் இலட்சியமாக மாறி விடுவதும் உண்டு. இந்த இன்பங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவற்றை உடலில் உயிர் உள்ளவரைதான் அனுபவிக்க முடியும். இந்நிலையில் இந்தத் தாற்காலிக இன்பங்களுக்கு எவ்வளவு பெரிய முயற்சிகள், பிரயாசைகள்.. அப்ப்பபா!
இந்த யதார்த்தம் நாம் அறியாத ஒன்றல்ல. நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்களின் வரலாறுகள் நமக்குப் படிப்பினை. அதனால், வாழும்வரை இறைவனுக்கு அஞ்சி, பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதே உத்தமம்.
இதையே திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது:
"நன்கு அறிந்து கொள்ளுங்கள்; இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை (57:20)
- தினமணி, ஆன்மிகச் சிந்தனையில் 09.03.1995 வெளியானது.
