பாலை மலர் - 10, 'நினைவில் கரைந்து.. உயிரில் கலந்த உறவே!'
http://udayathaaragai.blogspot.com/2013/02/10.html
தலைவன் பொருளீட்டச் செல்ல இருக்கும் செயலைக் குறிப்பில் தலைவி உணர்ந்தாள். ஆற்ற மாட்டாது துன்புற்றாள்.
அப்போது தோழி, "தலைவியே! ஆண்களின் கடமைகளில் பொருள் தேடுதலையும் ஒன்றாக்கி வைத்துள்ளனர் பெரியோர். அந்த ஆண் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாய் தேட வேண்டிய பொருளுக்கு நம் தலைவர் செல்ல வேண்டியவர் ஆவார். அதனால், சிறிது காலம் நீ இந்தப் பிரிவை பொறுப்பதே நல்லது!" - என்று சமாதானம் சொன்னாள்.
"நல்ல தோழியே! காட்டு எருமைகள், பிரிந்து போன எருமைக் கன்றுகளை எண்ணி கதறிக் கொண்டிருக்கும் இடமும், அங்கு கிடக்கும் கற்கள் யானைகள் போல் பரவி நின்று தோற்றமளிக்கும் இடமும், 'சிள்' வண்டுகள் பல இடங்களில் திரிந்து கூடி ஒலித்துப் பயமுறுத்தும் இடமுமானதுதான் பாலை வழி. அவ்வழியே எவரேனும் செல்வார் உண்டோ? அந்த நினைப்பு கூட வரக்கூடாதே! நினைத்தாலே நெஞ்சு எரியும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சென்றவரும், தாம் எடுத்துக் கொண்ட காரியம் முடியும்படி பாலை வழியே போய் மீளுதல் என்ற வெற்றியை அடைவாரோ? அடையார்! எனவே நம் தலைவர் பொருள் வழியில் பிரிதல் பொல்லாத ஒன்றாகும்!"- என்றழுதாள் தலைவி.
"பறித்துக் கொள்வதற்குரிய பொருள் வழி செல்பவரிடம் இல்லை என்றாலும், இரக்கமே இல்லாத பாலை நில மறவர் திடீரென்று தோன்றி அவர்களைக் கொல்வர்!
புள்ளிகளை உடைய பருந்துகள், கழுகுகளுடன் சேர்ந்து புதிதாக வழியில் செல்பவர்களை தாக்கி அவர்களிடம் உள்ள பொருளைப் பறித்துக் கொள்ள எதிர்பார்த்து அங்குத் தங்கி கொள்ளை கிடைக்காமலேயே உறங்கி விழுகின்றன!
அங்கு கள்ளிச் செடிகளையொட்டி, கரிய மரங்களும், நாரான பற்றுதல் இல்லாத மலர்களையுடடைய நீண்ட முருங்கை மரங்களும், அடர்ந்த மூங்கில் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன!
இத்தகைய பாலைவழியே நல்ல வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவர் செல்ல நினைப்பாரோ? நினையார்!"-என்று தலைவி தோழியிடம் சொல்லிச் சொல்லி புலம்பலானாள்.
சங்கக் காலத் தலைவியின் நிலையில்தான் அப்துல்லாஹ்வைப் பிரிந்து அலைபாயும் சோக எண்ணங்களுடன் ஆமினா அமர்ந்திருந்தார்.
தேசங்கள், வாழ்க்கை முறைகள் வேறாயினும் மனிதரும், மனிதருள் உருவாகும எண்ணங்களும் ஒன்றுதானே! பிரிவும் துயரம்தானே!
- இறைவன் நாடினால்.. பூக்கும்.