ஒரு சொல்: ‘மாஸ்டர் கீ…!’
http://udayathaaragai.blogspot.com/2013/03/blog-post_24.html
“ஒரு காலத்தில் நான் எவ்வளவோ படித்துள்ளேன். நவீன தத்துவம், அறிவியல், பொருளியல், அரசியல் என்று ஒரு நூலகத்தையே என் மூளைக்குள் திணித்தேன். ஆனால், பூரணமாக திருக்குர்ஆனைப் புரிந்து படித்த பின்புதான், நான் அதுவரை படித்ததெல்லாம்… வீணானது என்பது புலப்பட்டது.
திருக்குர்ஆனைப் படித்த பின்புதான், மெய்யான கல்வியின் ஆணிவேர் என் கைக்கு கிட்டியது. ‘கான்ட்’, ‘ஹெகல்’, ‘நீட்ஷே’, 'மார்க்ஸ்' போன்ற இன்னும் பல பெரும்.. பெரும் சிந்தனையாளர்கள் 'சிறார்களாக' புலப்பட்டனர். அவர்கள் மீது எனக்கு இரக்கம்தான் சுரந்தது. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும், பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாண பெரும் புத்தகங்களை எழுதுவதில் கழித்துள்ளனர். அவர்களுடைய சிந்தனைகள் எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைக்கவில்லை.
ஆனால், திருக்குர்ஆனோ இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் இரத்தினச் சுருக்கமாக தீர்வு கண்டுள்ளது. இதுதான் எனக்கு மெய்யாக உதவிய புத்தகம். இது என்னை முற்றிலும் மாற்றியது. என்னுள் இருந்த மிருகத்தனத்தை எல்லாம் ஒழித்து என்னை பூரண மனிதனாக்கியது. காரிருளிலிருந்து என்னை பேரொளிக்குக் கொண்டுவந்தது. எந்தப் பிரச்னையை நான் ஆய்வு செய்ய நினைத்தாலும் அந்தப் பிரச்னை மீது படர்ந்திருக்கும் இருட்திரையை நீக்கி தெள்ளத் தெளிவாய் அதனைக் காண்பிக்கும் ஒளிச்சுடராய் அது திகழ்ந்தது.
எந்தப் பூட்டையும் திறக்கவல்ல சாவியை ஆங்கிலத்தில் ‘மாஸ்டர் கீ’ என்றழைப்பார்கள். உலகப் பிரச்னைகளுக்கு திருக்குர்ஆன் அத்தகைய ‘மாஸ்டர் கீ’ ஆகும்.
வாழ்க்கையின் சகல பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வை அளிக்கவல்ல ஒரே திறவுகோல் திருக்குர்ஆனேயாகும். சகல பிரச்னைகளுக்கும் தீர்வு காண இந்தத் திறவுகோல் ஒன்றைத்தான் நான் பயன்படுத்துகின்றேன்.
திருக்குர்ஆனை அளித்த இறைவனுக்குத் தகுந்த நன்றி செலுத்த எளியோனாகிய என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை!”
- மௌலானா அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்)