ஆன்மிகச் சிந்தனை: 'அழுதபடியே தொழுத அண்ணல்'
http://udayathaaragai.blogspot.com/2014/03/blog-post_18.html
ஓர் இரவு இறைத்தூதர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பாதி இரவு கழிந்திருந்தது..
நபிகளார் திடீரென்று விழித்துக் கொண்டார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்றார்கள்.
நானும் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் பக்கத்திலிருந்த பள்ளிவாசலில் நுழைந்தார்கள். ஓர் அடிமையைப் போல பய பக்தியுடன் தொழ ஆரம்பித்தார்கள்
நான் வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் பெருமானார் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் அழுதவாறே இருந்தார்கள்.
வைகறையில் நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பை விடும் வரை இந்த நிலை தொடர்ந்தது. அதன் பின் காலை நேரத்துத் தொழுகைக்கு தலைமை தாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.
நபிகளாரின் கால்கள் தடித்து வீங்கிவிட்டிருந்தன. பெரு விரல்கள் கிழிந்து நிண நீர் வழிந்து கொண்டிருந்தது.
நபிகளாரின் நிலையைக் கண்டு நான், "ஓ! இறைவனின் தூதரே! தங்களுக்கு ஏன் இந்த சிரமம்? தங்களின் முன், பின் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டு விட்டனவே!" - என்று அழுதவாறு கேட்டேன்.
அதற்கு நபியவர்கள், "ஆயிஷாவே! இறைவன் என் மீது பொழிந்துள்ள அருள்வளங்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நல்ல இறையடியானாக நான் இருக்க வேண்டாமா?" - என்றார்கள்.
நபிகளாரின் சொந்த வாழ்க்கையைக் குறித்து அவர்களின் துணைவியாரிடம் நபித்தோழர் ஒருவர் கேட்டபோது, அவ்வம்மையார் சொன்ன ஒரு சம்பவமே இது.
நபிகளார் சொன்னது எத்தனை அர்த்தமுள்ள பதில்!
இறைவன் மனிதர் மீது சொரிந்துள்ள அருள்மாரிகளுக்கு எத்தனைதான் சிரம் பணிந்து தொழுது நன்றி செலுத்தினாலும் அதற்கு ஈடில்லையே!
- தினமணி, 31.03.1995 - ஆன்மிகச் சிந்தனையில் பிரசுரமானது.