அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 13: அழுதபடியே தொழுத அண்ணல்..!
http://udayathaaragai.blogspot.com/2012/10/blog-post_4766.html
இந்த
மண்ணுலகில் எத்தனை எத்தனையோ மகன்கள், நல்லவர்கள், பெரியோர்கள்
தோன்றியிருக்கிறார்கள். மனிதன் ஈடேற்றம் பெறுவதற்கான போதனைகளைச்
சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நபிகளார் போதனைகளுக்கும் பெருத்த
வித்யாசம் உண்டு.
மனிதனின் அகம்-புறம் சார்ந்த முழு வாழ்க்கைக்குமாய் நபிகளாரின் போதனைகள் காணக் கிடைக்கின்றன.
பொது வாழ்வானாலும் அந்தரங்க வாழ்வானாலும் வெள்ளை வெளேர் வானமாய் வரலாற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான போதனைகள் அவை.
ஓர் இரவு இறைத்தூதர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பாதி இரவு கழிந்திருக்கும்.
நபிகளார் திடீரென்று விழித்துக்கொண்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் சென்றார்கள்.
நானும் நபியவர்கள் பின்தொடர்ந்து சென்றேன்.அவர்கள் பக்கத்திலிருந்த பள்ளிவாசலில் நுழைந்தார்கள்.
பயபக்தியோடு ஒரு அடிமையைப் போல.. நின்று தொழ ஆரம்பித்தார்கள்.
நான் வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தேன்.
சற்று நேரத்துக்கெல்லாம் பெருமானார் தேம்பி.. தேம்பி அழ ஆரம்பித்தார்கள். தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும் அழுதவாறே இருந்தார்கள்.
வைகறையில், நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பை விடும் வரை இந்த நிலைமை தொடர்ந்தது. அதன் பின் காலை நேரத்துத் தொழுகைக்கு தலைமைத் தாங்கிவிட்டு.. வீட்டிற்கு வந்தார்கள்.
நபிகளாரின் கால்கள் தடித்து வீங்கி விட்டிருந்தன. பெரு விரல்கள் கிழிந்து நிண நீர் வழிந்து கொண்டிருந்தது.
அவர்களின் நிலையைக் கண்டு நான், “ஓ! இறைவனின் தூதரே, தங்களுக்கு ஏன் இந்த சிரமம்? தங்களின் முன்-பின் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டு விட்டனவே!” – என்று அழுதவாறே கேட்டேன்.
அதற்கு நபியவர்கள், “ஆயிஷாவே, இறைவன் என் மீது பொழிந்துள்ள அருள்வளங்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நல்ல இறையடியானாக நான் இருக்க வேண்டாமா?” – என்றார்கள்.
முஹம்மது நபிகளாரின் (ஸல்) சொந்த வாழ்வைக் குறித்து அவர்களின் துணைவியாரிடம் நபித்தோழர் ஒருவர் கேட்டபோது, அவ்வம்மையார் சொல்லிக் காட்டிய சம்பவமே இது!
இத்தகைய ஒருவர் குறித்துதான் இவர்கள் பொய்யான விமர்சனம் செய்கிறார்கள்.
- இறைவன் நாடினால் அருட்கொடைகள் தொடரும்.