அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 38: 'இறைவா...! எமக்கருள்வாய்...!'
http://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_15.html
வாழ்க்கையில் சலிப்படையத் தேவையில்லை. பிரச்சினைகளை இறைவனிடமே முறையிட்டு தீர்வுகளைப் பெறமுடியும் என்று அழகிய ஆலோசனைக் கூறுகிறார்கள் அண்ணல் நபி (ஸல்). இதோ நலம் பயக்கும் நபிகளாரின் அந்த ஆலோசனை இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்...
இறைவனை நேசிப்பதும், அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதும் இறைநம்பிக்கையாளனின் பண்பாகும். தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மறுமை சொத்துக்களை அதிகம் அதிகம் ஈட்டுவதற்கே அவன் பயன்படுத்துவான். சமுதாயத்தில் தீமைகள் தடுக்கப்படுதற்காகவும், நன்மைகள் பரவுவதற்காகவும் சதா அவன் பாடுபடுவான்.
இவ்வகையில் நற்பேறு, மன அமைதி என்னும் செல்வங்களை அவன் ஈட்டிக் கொள்வான். நீண்ட ஆயுள் இத்தகைய மனிதனுக்கு நன்மைகளைத் தேடிக் கொள்ள பெரிதும் உதவும்.
அதேபோல, பாவங்களின் நிழலில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் தீயவன் என்றாவது ஒரு நாள் இறைவன் பக்கம் திரும்பவும், இறைவனின் சந்நிதியில் தன் பாவங்களுக்காக வருந்தி... கண்ணீர் சிந்தி... மனம் திருந்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் அவனுடைய நீண்ட ஆயுளாகும்.
நல்லவரோ, தீயவரோ யாராக இருந்தாலும் அவர் தானே வருந்தி மரணத்தை அழைக்கக்கூடாது.
முஹம்மது நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள்:
"உங்களில் எவரும் மரணத்தை விரும்பி அழைக்க வேண்டாம்! ஏனென்றால்.. அவர் நன்மை செய்பவராக இருந்தால் .. நன்மையை இன்னும் அதிகம் செய்யக்கூடும். அவர் தீயவராக இருந்தால் தன் பாவங்களுக்காக இறைவனிடம் புகலிடம் தேடி மன்றாடக் கூடும்!"
அன்பு நபி ஓர் அழகிய பிரார்த்தனையையும் கற்றுத் தருகிறர்கள்:
"இறைவா! உயிர் வாழ்வது எனக்குப் பயனுள்ளதாக இருக்கும் வரையில் என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் அடைவதில் எனக்கு நன்மை இருக்குமானால் அப்போது என்னை மரணிக்கச் செய்வாயாக!"
.... இறைவன் நாடினால்...அருட்கொடை தொடரும்.