அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 37: 'அச்சமே அன்புக்கு அடிப்படை'
http://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_14.html
முன் சென்று போன சமுதாயங்களின் வரலாறுகள் படிப்பினை மிக்கவை. அத்தகைய வரலாறுகளை தம் தோழர்களுக்கு போதிப்பதில் வல்லவர்கள் நபிகளார்.
இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில் அத்தகைய ஒரு வரலாறும் அரிய படிப்பினையும் இதோ!
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தருவாயில் தன் மகனிடம் கேட்டான்:
"மகனே, என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஒரு தந்தை என்ற முறையில் நான் என் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினேனா?"
"தாங்கள் ஒரு நல்ல தந்தையாகத்தான் நடந்து கொண்டீர்களாப்பா!" -என்றான் மகன்.
அந்த மனிதன் தொடர்ந்தான்: ".... மகனே, நான் ஒருபோதும் நற்செயல் புரியவில்லை. அதனல், இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும் வேளையில் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, மகனே! நான் இறந்ததும், என்னுடைய உடலை எரித்துவிடு. எலும்புகளை நன்றாக அரைத்துப் பொடியாக்கிவிடு. அந்த சாம்பலை வேகமாக வீசும் காற்றில் தூவி விடு!"
மகனும் தந்தை சொன்னபடியே செய்து முடித்தான்.
இறைவனோ மரணமடைந்த அந்த மனிதனின் சாம்பலை ஒன்று திரட்டி மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினான்.
"நீ ஏன் இவ்வாறு நடந்து கொண்டாய்?" - என இறைவன் அவனிடம் கேட்டான்.
அதற்கு அந்த மனிதன், "என் எஜமானனே! உன்னுடைய அச்சத்தால்தான் அப்படி நடந்து கொண்டேன்!"-என்று பதிலளித்தான்.
இதைக் கேட்ட இறைவன் தன் அளவற்ற கருணையினால்.. அந்த மனிதனை மன்னித்துவிட்டான்.
'இறையச்சம் இறை அன்பைப் பெற்றுத் தரும்!'- என்பதை வலியுறுத்தி முஹம்மது நபிகளார் (ஸல்) தம் தோழர்களுக்கு விளக்கிய சம்பவமிது.
உண்மையில், நாவை, கை - கால்களை, எண்ணங்களை தீமையிலிருந்து தடுத்துக் கொள்வது அல்லது அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது இறையச்சம் எனப்படும். இதுவே இறைநம்பிக்கையின் உயிரூட்டமுமாகும்; நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான மிக முக்கியச் சாதனமாகும்.
-- இறைவன் நாடினால் அருட்கொடை தொடரும்.