அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 41: 'ஒற்றை வரி அறிவுரை'
http://udayathaaragai.blogspot.com/2012/11/blog-post_18.html
தம்மை சீர்த்திருத்திக் கொள்ள முன்வருவோர் வரிசையாக ஒவ்வொரு அறிவுரையையும் பின்பற்றி நல்லவராக நலம் பெறுவார். இது உலக வழக்கு.
ஆனால், நபிகளாரின் திருச்சபையில் வந்து நின்றவர் ஒற்றை வரியில் ஒரு அறிவுரையை வேண்டி நிற்கிறார். அதை மட்டுமே அவரால் பின்பற்ற முடியும் என்கிறார். நபிகளார் அவருக்கு எத்தகைய நல்லுரையை வழங்குகின்றார் தெரியுமா..? இதோ காட்சிக்குள் நுழையுங்கள் இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்...
நபிகளாரிடம் ஒருவர் வந்தார்.
"இறைவனின் தூதரே, என்னிடம் ஏராளமான தீய பழக்கங்கள் உள்ளன. ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இருக்கின்றேன். எதை விடச் சொல்கிறீர்கள்?"
நபிகளார் சொன்னார்கள்: "நல்லது சகோதரரே! இன்றிலிருந்து நீங்கள் பொய் சொல்வதை மட்டும் விட்டு விடுங்கள். எப்போதும் உண்மையையே பேசுங்கள்!"
அந்த மனிதர் அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இரவு வந்தது. அவர் வழக்கம் போல திருடுவதற்குத் தயாரானார்.
அப்போது அவருக்கு நபிகளாரிடம் அளித்த உறுதி மொழி ஞாபகம் வந்தது.
"இரவு என்ன செய்தீர்கள்? என்று இறைத்தூதர் கேட்டால்.. நான் என்ன சொல்வது? திருடச் சென்றேன் இறைவனின் தூதரே! என்றா சொல்ல முடியும். அப்படி சொன்னால்.. திருடனாகிய என்னை யார்தான் மதிப்பார்கள்? அத்துடன் திருடியதற்கும் தண்டனையல்லவா கிடைக்கும்! அதேசமயம் பொய் சொல்லவும் கூடாது.. ம்.. என்ன செய்வது ஒரே குழப்பமாக இருக்கிறது!" - என்று பலவாறு யோசித்தார்.
கடைசியில் இனி திருடுவதில்லை என்று தீர்மானித்தார். அந்த தீய பழக்கத்தை அவர் விட்டு விட்டார்.
அடுத்த நாள். மது அருந்துவதற்கு குவளையை எடுத்தார். அதை வாயருகே கொண்ட செல்லும் நேரத்தில் நபிகளாரின் திருமுகம் நினைவில் எழுந்தது.
"பகலில் என்ன செய்தீர்கள் சகோதரரே? என்று நபிகளார் கேட்டால்.. நான் செய்வது? மது அருந்தினேன்! என்று எப்படி சொல்வது? முஸ்லிம் எப்போதும் மரு அருந்தக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றச் செயல். இது என்ன சிக்கல்!"- என்று நெடு நேரம் யோசித்தவர் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டார்.
இப்படி தீயசெயலில் ஈடுபடப் போகும் போதெல்லாம் உண்மையே பேச வேண்டும் என்ற நபிகளாரின் நல்லுரை அவரது எல்லா கெட்டப் பழக்கங்களைம் விட வைத்தது.
நாளடைவில் அவர் நல்ல பண்புள்ள ஒழுக்கச்சீலரான மனிதராக மாறிவிட்டார்.
எப்போதும் உண்மையைப் பேசுவது வாழ்வில் நன்யைமையத் தரும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அன்பு நபியின் ஒற்றை வரி நல்லுரையின் வலிமையைப் பார்த்தீர்களா?
--- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.
உண்மை என்ற ஒற்றை வரியில் உலகம் சுபீட்சம் பெறும் என்பது இந்த சம்பவம் உணர்த்துகிறது.
ReplyDelete