ஆன்மிகச் சிந்தனை: 'இறைவனிடம் அடைக்கலம்'
http://udayathaaragai.blogspot.com/2014/03/blog-post_20.html
இறைவனை நேசிப்பதும் அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதும் இறைநம்பிக்கையாளனின் பண்பாகும். தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷ நேரத்தையும் 'மறுமை' சொத்துக்களை அதிகம் சேர்ப்பதற்கே அவன் பயன்படுத்துவான். சமுதாயத்தில் தீமைகள் தடுக்கப்படுவதற்காகவும், நன்மைகள் பரவுவதற்காகவும் சதா பாடுபடுவான். இவ்வகையில் நற்பேறு, மன அமைதி என்னும் செல்வங்களை அவன் ஈட்டிக் கொள்வான். நீண்ட ஆயுள் இத்தகைய மனிதனுக்கு நன்மைகளைத் தேடிக் கொள்ளப் பெரிதும் உதவும்.
அதுபோல, பாவங்களின் நிழலில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் தீயவன் என்றாவது ஒருநாள் இறைவன் பக்கம் திரும்பவும், இறைவனின் சந்நிதியில் தன் பாவங்களுக்கு வருந்தி கண்ணீர் சிந்தி மனந்திருந்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் அவனுடைய ஆயுளாகும்.
நல்லவரோ, தீயவரோ யாராக இருந்தாலும் அவர், தானே வருந்தி மரணத்தை அழைக்கக் கூடாது.
நபி பெருமானார் கூறுகிறார்கள்: "உங்களில் எவரும் மரணத்தை விரும்பி அழைக்க வேண்டாம்! ஏனென்றால், அவர் நன்மை செய்பவராக இருந்தால்... நன்மையை இன்னும் அதிகமாக செய்யக்கூடும். அவர் தீயவராக இருந்தால்.. தன் பாவங்களுக்காக இறைவனிடம் புகலிடம் தேடக்கூடும்!"
அண்ணலார் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தருகிறார்கள்: "இறைவா! உயிர் வாழ்வது எனக்குப் பயனுள்ளதாக இருக்கும் வரையில் என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் அடைவதில் எனக்கு நன்மை இருக்குமானால் அப்போது என்னை மரணிக்கச் செய்!"
- தினமணி, 14.04.1995, ஆன்மிகச் சிந்தனை' பகுதியில் பிரசுரமானது.