ஆன்மிகச் சிந்தனை: 'உதவி சிறிது; பதவி பெரிது!'
http://udayathaaragai.blogspot.com/2014/03/blog-post_24.html
ஓர் ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அப்பூனைக்குச் கிழவி சரியாக உணவளிப்பதில்லை. நீரும் அளிப்பதில்லை. பூனையைக் கட்டிப் போடட்டு அதை வருத்தி வந்தாள். இந்நிலையில் அவள் மரணமடைந்ததாள். நரகம் சென்றாள்.
பாலைவனம்.
உச்சிவேளையில் ஒரு மனிதன் நடந்து வந்தான். தீய்க்கும் வெய்யிலால் நீர்த்தாகம் அவனை வாட்டியது.
பாலையில் ஒரு கிணறு இருந்தது.
அதில் இறங்கிய வழிப்போக்கன் போதிய மட்டும் நீர் அருந்தினான்.
கிணற்றுக்கு வெளியே ஒரு நாய் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தது.
கிணற்றைச் சுற்றி இருந்த ஈர மணலை தாகம் தாங்காமல் அது நக்கியது.
இதைக் கண்ட மனிதனின் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது.
திரும்பவும் வழிப்போக்கன் கிணற்றில் இறங்கினான். தன் தோல் காலுறையில் நீர் மொண்டான். அதை பல்லில் கடித்து சிரமத்துடன் மேலே கொணர்ந்தான். தாகம் தீர நாய்க்கு உதவினான்.
இவனது செயலைக் கண்ட இறைவன் அவனுக்குச் சொர்க்கம் தந்தான்.
'உயிர்களிடம் இரங்குதல் வேண்டும்!' என்பது சம்பந்தமாக நபிகளார் போதனை செய்யும்போது தம் தோழர்க்குச் சொன்ன அறிவுரை சம்பவங்களில் ஒன்று.
சிறிய செயல்களானாலும் அவற்றின் முக்கியத்துவத்தையும், செயல்துடிப்பையும் வைத்து இறைவனிடம் அவை உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றன.
- தினமணி ஆன்மிகச் சிந்தனைப் பகுதியில் 08.05.1995 அன்று பிரசுரமானது..