கல்லாதார் மத்தியில் அழைப்பை சேர்ப்பதெப்படி?
http://udayathaaragai.blogspot.com/2014/08/blog-post.html
கேள்வி: நம் நாட்டில் 80 விழுக்காடு மக்கள் கல்வியறிவு அற்றவர்கள். இத்தகைய மக்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப் பணியை எப்படி செய்வது?
பதில்:
அன்றைய அரேபியாவை நினைத்துப் பாருங்கள். மக்காவில் அண்ணல் நபிகளார் தமது
அழைப்புப் பணியை ஆரம்பித்தபோது அந்த அரேபியர்கள் நூறு விழுக்காடு பேர்
கல்லாதவர்களாகவே இருந்தார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
வளர்ச்சியடைந்திருந்த குறைஷிக் கோத்திரத்தில்கூட எழுதப் படிக்கத்
தெரிந்தவர்களின் எண்ணிக்கை எழுபதுக்கு மேல் இல்லை. அதேபோல, மதீனா நகரிலும்
மிகக் குறைந்த அளவு மக்களே கல்வியறிவு பெற்றிருந்தனர். இந்த இருபெரும்
நகரங்களின் நிலைமையை வைத்தே அன்றைய முழு அரேபியாவும்
எப்படியிருந்திருக்கும் என்பதைத நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.
திருக்குர்ஆன் அந்த நாட்டில் அச்சிட்டுப் பரப்பப்படவில்லை. மாறாக, மக்களுக்கு அது வாய் மொழியாகவே போதிக்கப்பட்டது.
நபிகளார் திருக்குர்ஆன் ஓதுவதை கவனமாகக்
கேட்கும் நபித் தோழர்கள் அதை அப்படியே மனனம் செய்துவிடுவார்கள். பிறகு அதனை
மற்றவர்களுக்கும் ஓதிக் காண்பிப்பார்கள். இவ்வாறுதான் திருக்குர்ஆன்
அரேபியா முழுவதும் பரவியது.
துவக்கத்தில் இந்த தீன், கல்லாதார் மத்தியில்தான் பிரச்சாரம் செய்யப்பட்டது. வாய்மொழிகள் மூலமாகவே இறை போதனைகள் உபதேசிக்கப்பட்டன.
உண்மை இவ்வாறிருக்க, இப்பொழுதுள்ள
நிலைமையைக் கண்டு நாம் ஏன் திகைக்க வேண்டும்? 80 விழுக்காடு மக்களுக்குப்
படிப்பறிவு இல்லாவிட்டாலும் மீதமுள்ள 20 விழுக்காடு பேர் எழுதப்படிக்கத்
தெரிந்தவர்கள்தானே? அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு அதனை
மற்றவர்களுக்கும் வாய்மொழி மூலமாகவே எடுத்துரைக்கலாமே!
இந்த விஷயத்தில் அக்கால முஸ்லிம்களுக்கும், இன்றைய முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு காணக் கிடைக்கிறது.
அந்தக் காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டால் பிறகு அவர் சும்மா இருப்பதில்லை. பிற மக்களிடமும் இந்தப்
போதனையை சேர்ப்பிப்பது தமது கடமை என்ற துடிப்பு இருந்தது. அதற்காகவே தங்கள்
வாழ்வையும் அர்ப்பணித்தார்கள். இப்பணிகள் அனைத்தும் வாய்மொழி மூலமாகவே
நடைபெற்றன. அழைப்பை விப்பவரும் அதனை ஏற்றுக் கொள்பவர்களும் எழுதப்படிக்கத்
தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அன்னும் இருந்ததில்லை.
இன்றும் தேவையில்லை.
படித்தர்களைவிட படிக்காதவர்கள்தான்
இஸ்லாத்தை விரைவாக ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால், இன்றைய
‘ஏட்டுச்சுரைக்காய்’ படிப்பு, கோணல் புத்தியையும், வீண்வாதம் செய்யும்
மனோபாவத்தையும் வளர்த்து வருகிறது.
ஆனால், படிக்காதவர்களிடம் பெரும்பாலும்
இந்தக் கோணல் புத்தி இருப்பதில்லை. தங்களின் மனசாட்சி சரியென்று சொல்வதை
அவர்கள் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.
எனவே, மக்களின் கல்வியறிவற்ற தன்மை
இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு ஒரு தடையல்ல. இப்போது தடையாக இருப்பதெல்லாம்
இந்த தீனைப் பரப்ப வேண்டும் என்ற உணர்வு முஸ்லிம்களிடையே மங்கிப்
போனதுதான்!
இஸ்லாமிய பணிகளுக்காக தங்கள் வாழ்வையே
அர்ப்பணித்த ஆரம்பக்கால முஸ்லிம்கள் போல நீங்களும் விளங்கினால்,
அவர்களுக்கிருந்த துடிப்பும், ஆர்வமும் உங்களுக்கும் இருந்தால் இஸ்லாத்தைப்
பரப்புவதற்கு வேண்டிய வாய்ப்புகள் இன்றும் காத்துக் கொண்டிருப்பதை
நீங்களும் காணலாம். இதற்கு மாறாக, நூற்றுக்கு நூறு விழுக்கடு மக்கள்
படிப்பறிவுப் பெற்ற பிறகுதான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுவோம் என்று
நீங்கள் காத்துக் கொண்டிருந்தால் அதனால், எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.